திருவள்ளூர் அருகே, மனைவியுடன் தகராறு; கத்தி பாய்ந்து கடைக்காரர் சாவு

திருவள்ளூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கத்தி பாய்ந்து கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-01-18 22:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு, விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 40 ). இவர் திருவள்ளூரை அடுத்த கந்தன்கொல்லை பகுதியில் சாலையோரம் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். அவர் மூலம் 2 மகன்கள் உள்ளனர். இதையடுத்து 2-வதாக சுகன்யாவை (வயது 35) திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் குடிபழக்கம் கொண்ட கோபால் அடிக்கடி மது குடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்து மனைவி சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடி போதையில் வீட்டுக்கு வந்த கோபால் மனைவி சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவியை குத்த முயன்றார். அப்போது தடுமாறி விழுந்ததில் கத்தி எதிர்பாராதவிதமாக அவரது மார்பில் பாய்ந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கோபாலை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கோபால் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்