நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-01-19 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.

இருப்பினும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நிர்வாகம் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

இதற்காக நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம் மற்றும் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் துளசி மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் நாமக்கல் மட்டும் இன்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்