கிண்டியில் இளம்பெண் மர்ம சாவு - கொலையா? போலீஸ் விசாரணை

கிண்டியில் வீட்டுக்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2020-01-19 22:43 GMT
ஆலந்தூர், 

சென்னை கிண்டி மடுவின்கரை மசூதி காலனி 5-வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 36). இவருடைய மனைவி உஷா (30). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் அதே பகுதியில் மாவு கடை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு உஷாவின் சகோதரி செல்போனில் அவரை தொடர்பு கொண்டார். அப்போது போனை எடுத்து பேசிய பிரசாத், உஷா தூங்குவதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து நேற்று மீண்டும் அவர் தொடர்பு கொண்டபோது, போனை ஆந்திராவில் உள்ள பிரசாத்தின் உறவினர் எடுத்து பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த உஷாவின் சகோதரி, கிண்டியில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் விவரத்தை கூறி தங்கையின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

அதன்படி அவர்கள் உஷா வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு உஷா, மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. பிரசாத், தனது மகளை ஆந்திராவில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரிந்தது.

இது பற்றி தகவல் அறிந்துவந்த கிண்டி போலீசார், உஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் உஷா அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

உஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் அவரது சாவுக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவான பிரசாத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்