வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே உள்ள மறுமலர்ச்சி நகரை சேர்ந்த திரளான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் தாமரைப் பாக்கம் கூட்ரோடு அருகே உள்ள மறுமலர்ச்சி நகரில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு அளித்த வீட்டுமனைப்பட்டா பெற்று உள்ளோம்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து இங்கு மேம்பாலம் வர உள்ளதால் அனைவரும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த நாங்கள் எங்கள் வீடுகளை அகற்றக்கூடாது என மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்தோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக் குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.