உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்

உசிலம்பட்டி அருகே பட்டதாரி பெண்ணையும், தாயையும் கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-20 23:30 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கொக்குடையான்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் முனிப்பாண்டி. அரசு பஸ் டிரைவர். அதே ஊரைச்சேர்ந்த பால்வீரணன் என்பவரது மகன் மதன்குமார்(வயது19). இவர் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முனிப்பாண்டி வீட்டின் அருகில் மதன்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த முனிப்பாண்டி அவர்களை கண்டித்துள்ளார். இதில் முனிப்பாண்டிக்கும் மதன்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை உருவாகியுள்ளது. நண்பர்கள் மத்தியில் தன்னை முனிப்பாண்டி அவமானப்படுத்தி விட்டதாக மதன்குமார் கருதி அவரை பழி வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.

இதற்காக நேற்று காலையில் மதன்குமார் கத்தியுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் முனிப்பாண்டி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன்பு நின்றிருந்த முனிப்பாண்டியின் மனைவி கலாவை(40) கத்தியால் வெட்டினார். நிலைகுலைந்து போன கலா அலறினார். தாயின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த அவரின் மகள் ஆனந்தசுவேதா(21) வெளியில் வந்து தனது தாயை வெட்டியவரை தடுக்க முற்பட்டுள்ளார். இதில் ஆனந்தசுவேதாவையும் மதன்குமார் வெட்டினார்.

தாயையும் மகளையும் வாலிபர் வெட்டுவதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மதன்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த கலாவும் ஆனந்தசுவேதாவும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கத்தி வெட்டுபட்ட ஆனந்த சுவேதா பட்டதாரியாவார்.

மேலும் செய்திகள்