கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சியில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-01-20 22:30 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் வசித்து வந்தவர் ராஜாராம் (வயது 68), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் இவருடைய 2-வது மகள் சுகந்தி என்பவரது குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற, ராஜாராம் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிய அவரது மனைவி விஜயலட்சுமி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். அப்போது ராஜாராம் தனது மகள் சுகந்தி வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்த விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட ராஜாராமின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது மகன் சத்தியநாராயணன்(30) கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாராமின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்