ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பெரம்பலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-22 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் தீரன் நகர் சாலை, தெற்கு அபிராமபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 58). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் ஒரு அறையிலும், அவரது மனைவி சரோஜாவும், இளைய மகன் வினோத்குமார் மற்றொரு அறையிலும், மூத்த மகன் பாரதிதாசன் தனது மனைவி கார்த்திகாவுடன் மற்றொரு அறையிலும் தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் பன்னீர்செல்வம், நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் அடங்கிய பைகள் வீட்டின் வெளியே சிதறி கிடந்தன. ஆனால் அந்த பைகளில் இருந்த 15½ பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் அருகே உள்ள ஜன்னல் வழியாக கையை விட்டு, கதவை திறந்து உள்ளே புகுந்து, அறையில் இருந்த பீரோவையும் திறந்து, அதில் இருந்த பைகளை வெளியே எடுத்து வந்து, அதிலிருந்த நகை, பணத்தை திருடி கொண்டு பைகளை தூக்கி வீசி சென்றிருந்தது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பான புகாரின்பேரில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் ஆட்கள் இருந்த போதே நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்