கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

Update: 2020-01-22 23:00 GMT
கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். நேற்று காலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை காண கடற்கரையில் திரண்டனர்.

அப்போது திடீரென கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், ராட்சத அலைகள் எழுந்து கரையில் பாறைகளில் மோதி சிதறியது. இதைகண்டு சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். முக்கடல் சங்கம கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றுலா போலீசாரும் பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

படகு போக்குவரத்து ரத்து

கடலின் நடுவே உள்ள பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று பார்வையிட அதிகாலையிலே படகுத்துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், கடல் சீற்றம் காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. தொடர்ந்து கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் படகு போக்குவரத்து நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகை படகுத்துறை நுழைவாயிலில் வைக்கப்பட்டது. இதனால், ஆர்வத்துடன் அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, கோவளம், சிலுவைநகர், புதுக்கிராமம், வாவத்துறை, மணக்குடி, கீழமணக்குடி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்வில்லை. மேலும், மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் அவசரமாக கரை திரும்பினர்.

மேலும் செய்திகள்