குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவி யுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2020-01-23 23:15 GMT
சென்னை, 

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 38). இவர், சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அமலாபுஷ்பம். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் வைரமுத்துவுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்குவந்த வைரமுத்து, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

வெகுநேரமாகியும் அறை கதவை திறக்காததால், சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள், கதவை தட்டினர். ஆனாலும் கதவை திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு போலீஸ்காரர் வைரமுத்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய வைரமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்