பெரம்பலூரில் குடியரசு தின விழா: கலெக்டர் சாந்தா தேசிய கொடி ஏற்றினார் - ரூ.2½ கோடியில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2020-01-26 22:30 GMT
பெரம்பலூர், 

நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து கலெக்டர் சாந்தா திறந்த ஜீப்பில் நின்றபடி சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு உடனிருந்தார். போலீசாரின் அணிவகுப்பிற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், மதுமதி, ரத்தினம் ஆகியோர் தலைமையேற்று வழிநடத்தி சென்றனர்.

இதைத்தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசியக்கொடி நிறத்திலான பலூன்களையும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்கவிட்டனர். பின்னர் சிறப்பாக பணிபுரிந்த 18 போலீசாருக்கு தமிழக முதல் -அமைச்சரின் பதக்கங்கள், சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். இதையடுத்து அவர் சுதந்திர போராட்ட தியாகிகள் 3 பேருக்கும் மற்றும் மறைந்த தியாகிகளின் குடும்பத்தினர் 8 பேருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

பின்னர் அவர் மெச்சத்தகுந்த வகையில் பணி செய்ததற்காக 15 போலீசாருக்கு சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 126 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 149 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 59 லட்சத்து 76 ஆயிரத்து 874 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி நேற்று தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது. பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், அந்தந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களும், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி தலைவர்களும் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

மேலும் செய்திகள்