விக்கிரவாண்டியில், பள்ளி மாணவி உயிருடன் தீ வைத்து எரிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விக்கிரவாண்டியில் பள்ளி மாணவியை உயிருடன் தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-26 22:00 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டியை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி. இவரது மகள் பாரதி (வயது 16). அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென பாரதியை கத்தியால் குத்தினர். தொடர்ந்து அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தனர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.

அந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாரதியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அங்கு புதுச்சேரி 3-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ் திரேட்டு பிரீத்தி முன்னிலையில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் மருது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி ஆகியோர் பாரதியிடம் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தீ வைத்து எரித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்