பலூன் வியாபாரி கழுத்து அறுத்துக்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை

திருச்சியில் இரவில் பலூன் வியாபாரி கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-27 23:30 GMT
மலைக்கோட்டை, 

திருச்சி தென்னூர் அண்ணாநகர் சின்னச்சாமி நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் மகன் முகமதுஇசாக்(வயது 21). இவர் பலூன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு 9.10 மணியளவில் மரக்கடை ராமகிரு‌‌ஷ்ணா பாலம் அருகே ஜலால்குதிரி தெருவில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் முகமது இசாக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் துணை கமி‌‌ஷனர் நி‌ஷா, கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமி‌‌ஷனர் ஸ்ரீகாந்த், பாலக்கரை போலீஸ் உதவி கமி‌‌ஷனர் பாலமுருகன் மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களும் அங்கு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார், கழிவறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த முகமதுஇசாக் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முகமதுஇசாக்கை கொலை செய்யும் நோக்கில் 3 பேர் கும்பல் விரட்டி வந்துள்ளனர். அப்போது அவர் உயிர் தப்பிக்க மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்திற்குள் புகுந்துள்ளார்.

ஆனாலும், அக்கும்பல் அவரை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டு தப்பியது. இந்த நிலையில் கொலையாளிகள் 2 பேர் ராமகிரு‌‌ஷ்ணா பாலத்திற்குள் புகுந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக சிலர் கூறவே, போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால், அப்படி யாரும் இல்லை என்று தெரியவந்தது. அதே வேளையில் மற்றொருவர் வேகமாக ஓடி தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

கொலையுண்ட முகமதுஇசாக்குடன், அதே பகுதியை சேர்ந்த முகமதுஅனிபா என்பவரும் பலூன் வியாபாரம் செய்து வந்ததாகவும், இருவரும் எப்போதும் ஒன்றாகவே திரிந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு மரக்கடை பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்தபோதுதான், முகமதுஇசாக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது நண்பர் முகமது அனிபா மாயமாகி விட்டார்.

இதனால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு ஒருவரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர். அவர் மாயமான முகமது அனிபாவா? என்பது தெரியவில்லை. மேலும் முகமதுஇசாக் கொலையுண்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தும் வருகிறார்கள்.

எனவே, கொலையை செய்தது ஒருவரா? அல்லது 3 பேரா? என்ற குழப்பத்துக்கு கண்காணிப்பு கேமரா பதிவு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது. கொலையுண்ட முகமது இசாக் கஞ்சா போதையில்தான் எப்போதும் திரிவார் என்று கூறப்படுகிறது. எனவே, நண்பர்களுக்குள் கஞ்சா போதையில் ஏற்பட்ட மோதலால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முகமதுஇசாக் மீது தில்லை நகர் போலீசில் அடிதடி வழக்குகள் 3 உள்ளது என்றும், அவர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்