கிராம மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு இடத்தை தனி நபர்களுக்கு வழங்கியதாக கலெக்டரிடம் மனு

மேலூர் அருகே கிராம மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் தனியாருக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Update: 2020-01-27 22:15 GMT
மதுரை,

மேலூர் வட்டம், நாவினிப்பட்டி கிராம மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் வினயிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் “நாவினிப்பட்டி கிராமத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், திருமண மண்டபம், தண்ணீர் தொட்டி அமைக்க அரசு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த பொது இடத்தை தனி தாசில்தார் பணம் பெற்று கொண்டு தனி நபர்களுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளார்.

எனவே தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து பொது பயன்பாட்டிற்கு அந்த இடத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

அதே போன்று சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் பெண்கள், சிறுமிகள் ஆகியோர் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கண்களை கட்டிக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த பரமசிவம் (வயது 65) என்பவர் தன்னுடைய பணம் மற்றும் மனைவியின் நகைகளை இளைய மகன் அபகரித்து கொண்டதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என்றும் கோரி கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழாவில் கலெக்டர் வினய் கலந்து கொண்டு குறை தீர்க்கும் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். இதனால் மனு கொடுக்க வந்திருந்தவர்கள் காலை முதல் மதியம் 12 மணி வரை காத்திருத்திருந்தனர். மேலும் அங்கு மனு கொடுக்க வந்திருந்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்