குளச்சல் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி - திருமணம் ஆன 10 மாதத்தில் பரிதாபம்

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார். திருமணம் ஆன 10 மாதத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-01-28 22:45 GMT
குளச்சல், 

குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம் மேல்விளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் மெரிஷ் (வயது 28). கால் டாக்சி டிரைவர். இவருக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள் ஆகிறது.

இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின் குளச்சலில் இருந்து பாலப்பள்ளத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஒற்றப்பனைவிளை பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோரம் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றி கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

மெர்லின் மெரிஷ் அந்த பகுதியில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கற்கள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெர்லின் மெரிஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்