லாரி மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தையல் தொழிலாளி சாவு - மகள் கண் எதிரே பரிதாபம்

கும்பகோணத்தில் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தையல் தொழிலாளி, மகள் கண் எதிரே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-01-28 22:15 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் அம்மாப்பேட்டை லைன்கார தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது40). தையல் தொழிலாளி. இவருடைய மகள் மஞ்சுளா (20). இவர் கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் உள்ள அரசு கவின் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். தீனதயாளன் தினமும் தனது மகள் மஞ்சுளாவை கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுவது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று அவர் தனது மகளை கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். கும்பகோணம் தாராசுரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அந்த லாரி அங்கிருந்த பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் தீனதயாளன், அவருடைய மகள் மஞ்சுளா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் தீனதயாளன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.மஞ்சுளா, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள் கண் எதிரே நடந்த விபத்தில் தையல் தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்