கடையநல்லூர் அருகே, செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு

கடையநல்லூர் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-28 22:15 GMT
அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகில் உள்ள திரிகூடபுரத்தில் மாமன்னர் பூலித்தேவன் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் அன்புசெல்வன் (வயது 25). அவருடைய மனைவி சங்கரன்கோவில் உள்ள ஆராய்ச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாராம். பின்னர் அங்கிருந்து கடந்த வாரம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அவர் சென்று விட்டாராம். அங்கிருந்து அன்புசெல்வனை, குழந்தையோடு பேச விடாமல் மனைவி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அன்புசெல்வன் நேற்று திரிகூடபுரத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் பாண்டி மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சாமர்த்தியமாக பேசி அன்புசெல்வனை கீழே இறங்க செய்தனர். அதன் பிறகு அவரை எச்சரிக்கை செய்து தந்தையுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்