ஓசூரில், தனியார் நிறுவனத்தில் ரூ.6¼ லட்சம் திருடிய மர்ம நபர் போலீசை கண்டதும் பணத்தை வீசி விட்டு தப்பி ஓட்டம்

ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ரூ.6¼ லட்சத்தை திருடிய மர்ம ஆசாமி போலீசை கண்டதும் பணத்தை வீசி விட்டு தப்பி ஓடினார்.

Update: 2020-01-30 22:15 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருப்பதி நகரை சேர்ந்தவர் பிரசன்னா டி.கிஸ்தே (வயது 36). இவர் ஓசூரில் 2–வது சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணிபுரிந்து வந்த நிறுவனத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.

இதையொட்டி அவர் கணக்காளர் அறைக்குள் புகுந்து அங்கு இரும்பு பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சத்து 41 ஆயிரத்தை திருடி சென்றார். அப்போது அந்த வழியாக ஓசூர் அட்கோ போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பணத்துடன் வெளியே வந்த மர்ம நபர் போலீசாரை கண்டதும் பயந்து போன அவர் பணப்பையை அதே பகுதியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று மர்ம நபர் வீசி சென்ற பையை பார்த்த போது அதில் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை போலீசார் மீட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்