ரூ.2 லட்சம் பெற்றார்: வாடகை தாயாக இருந்த நர்சு குழந்தையை கொடுக்க மறுக்கிறார் போலீசில் டாக்டர் புகார்

ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்ற நர்சு, தற்போது குழந்தையை கொடுக்க மறுத்து மிரட்டுவதாக போலீசில் டாக்டர் புகார் செய்து உள்ளார்.

Update: 2020-01-30 22:45 GMT
பூந்தமல்லி,

சென்னை வடபழனி, கவரை தெருவைச் சேர்ந்தவர் மனோகர்(வயது 46). டாக்டரான இவர், சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது கிளினிக்கில் நர்சாக வேலை செய்த ஜெயலட்சுமி என்பவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர், எனக்கு வாடகை தாயாக இருந்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுத்தர சம்மதம் தெரிவித்தார்.

அதற்காக முன்பணமாக ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவரது பெற்றோர் முன்னிலையில் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்துபோட்டு கொடுத்துள்ளார்.

தற்போது ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அவர் சொன்னபடி குழந்தையை என்னிடம் கொடுக்காமல் மற்றொரு நபருடன் சேர்ந்துகொண்டு என்னை மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது குழந்தையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்