திருச்சியில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய தம்பதி கைது

திருச்சியில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-01-30 22:45 GMT
திருச்சி, 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் காந்திநகரை சேர்ந்தவர் சரசு. இவர் கடந்த 26-ந் தேதி தனது 2 வயது பெண் குழந்தை ஜீவிதாவுடன் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அங்கு பர்தா அணிந்த பெண்ணும், அவரது கணவரும் வந்தனர். அவர்கள் சரசுவிடம் பேச்சு கொடுத்து, நைசாக குழந்தையை கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரசு கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.உடனே போலீசார் மத்திய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி.ரோட்டில் குழந்தையை தூக்கிக்கொண்டு பர்தா அணிந்த பெண்ணும், அவரது கணவரும் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி தகவல் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கோவையில் குழந்தையுடன் சென்று கொண்டு இருந்த தம்பதியை நேற்று முன்தினம் கோவை போலீசார் மடக்கி பிடித்தனர். புகைப்படத்தை வைத்து விசாரித்தபோது, அது திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தை என்பது தெரியவந்தது. உடனே இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கண்டோன்மெண்ட் போலீசார் கோவைக்கு சென்று தம்பதி்யை கைது செய்தனர்.

பின்னர் அந்த தம்பதியையும், குழந்தையையும் திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், குழந்தையை கடத்தியது ராமநாதபுரத்தை சேர்ந்த குகன்(26) மற்றும் அவரது 2-வது மனைவியான அரியமங்கலத்தை சேர்ந்த சாராம்மாள்(25) என்பதும் தெரியவந்தது. இவர்கள் குழந்தையை கடத்தி விற்க முயன்றார்களா? என தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மீட்கப்பட்ட குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்