பேச்சிப்பாறை கூட்டுறவு சங்க தலைவர் விஷம் குடித்து தற்கொலை

பேச்சிப்பாறை கூட்டுறவு சங்க தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-01-31 21:38 GMT
குலசேகரம், 

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே மணலோடை புறாவிளை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). பேச்சிப்பாறை கூட்டுறவு சங்க தலைவர். இவருடைய மனைவி சியாமளா (48). இவர்களுக்கு சுரேஷ்குமார் என்ற மகனும், சுமாகுமாரி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சியாமளா வெளியே சென்றிருந்தார். வீட்டில் ராமச்சந்திரன் மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் சியாமளா திரும்பி வந்த போது வீட்டில் ராமச்சந்திரன் இல்லை.

இதனால் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அப்போது அருகில் உள்ள தோட்டத்தில் ராமச்சந்திரன் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதனை கண்டு சியாமளா அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

தொடர்ந்து உயிருக்கு போராடிய ராமச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறில் ராமச்சந்திரன் தற்கொலை செய்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்