சொத்து தகராறில் பெரியப்பாவை அடித்து கொன்ற வாலிபர் கைது

பழனி அருகே சொத்து தகராறில் பெரியப்பாவை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-31 22:15 GMT
நெய்க்காரப்பட்டி, 

பழனி அருகே உள்ள அழகாபுரி மேற்குத்தெருவை சேர்ந்தவர் மாசாணம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது தம்பி மகன் பழனிசாமி (31). இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று மாசாணத்துக்கும், பழனிசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பழனிசாமி, கட்டையால் மாசாணத்தை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன்பின்னர் மாசாணம் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்துபோனார்.

இதுதொடர்பாக பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, மாசாணத்தை அடித்து கொன்ற பழனிசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்