விருத்தாசலம் அருகே பரபரப்பு கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

விருத்தாசலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-02-01 22:30 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த பரவளுர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் தை மாத 3-வது வெள்ளிக்கிழமை என்பதால், கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரவில் பூசாரி மணி கோவில் கதவை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை நடை திறப்பதற்காக மணி வந்த போது, அங்கு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ள சென்று பார்த்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் கோவில் கதவு பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர்.

வலைவீச்சு

பின்னர் போலீசார் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடம் இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர். உண்டியலில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்து இருக்கும் என்று கோவில் நிர்வாக தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்