ஓசூரில் பயங்கரம்: தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை நடைபயிற்சி சென்ற போது மர்மநபர்கள் வெறிச்செயல்

ஓசூரில் நடைபயிற்சி சென்ற போது தி.மு.க. பிரமுகரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

Update: 2020-02-02 23:00 GMT
ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இமாம்பாடாவை சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 49). தி.மு.க. பிரமுகர். இவர் கிரு‌‌ஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சிறுபான்மையினர் துணை அமைப்பாளராக இருந்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

இவர் தினமும் இரவு ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள நடை மேடையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். அதே போல நேற்று இரவு 7 மணி அளவில் அவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

அரிவாள் வெட்டு

சிறிது நேரம் நடைபயிற்சி செய்த மன்சூர் அலி அந்த பகுதியில் உள்ள பலகை ஒன்றில் அமர்ந்திருந்தார். அப்போது மைதானத்திற்குள் 2 மோட்டார்சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட் அணிந்தபடி வந்தது. கையில் வீச்சரிவாளுடன் வந்த அவர்கள் திடீரென மன்சூரை சுற்றி வளைத்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்சூர் அலி அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் மன்சூர் அலிக்கு உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரை வெட்டிய அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார்சைக்கிள்களில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மன்சூர் அலியை மீட்டு ஆட்டோவில் ஏற்றி ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மன்சூர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு மற்றும் ஓசூர் டவுன் போலீசார் அந்த மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்ட மன்சூர் அலியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட மன்சூர் அலிக்கு ‌‌ஷபினா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். ஓசூரில் நடைபயிற்சிக்கு சென்ற தி.மு.க. பிரமுகர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்