திருவெண்ணெய்நல்லூர் அருகே, விவசாயி வீட்டில் நகை - பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-02-02 22:00 GMT
விழுப்புரம்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்டராய நல்லூர் புதுக்காலனியை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் கஜேந்திரன் (வயது 39), விவசாயி. இவர் நேற்று அதிகாலை தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் காந்தலவாடியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் மதியம் கஜேந்திரன் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்