காசோலையில் போலி கையெழுத்து போட்டு பல லட்சம் மோசடி மன்னார்குடி நகராட்சி கணக்காளரிடம் விசாரணை

காசோலையில் போலி கையெழுத்து போட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக மன்னார்குடி நகராட்சி கணக்காளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Update: 2020-02-03 23:00 GMT
மன்னார்குடி,

தஞ்சையை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது50). இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி ரூ.2½ லட்சத்துக்கான நகராட்சி காசோலையை வங்கியில் மாற்றுவதற்காக அலுவலக உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.

வங்கியில் அந்த காசோலையை சரிபார்த்தபோது அதில் போடப்பட்டிருந்த கையெழுத்து மீது சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து வங்கியில் இருந்து மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையர் மேற்கொண்ட விசாரணையில் காசோலையில் இருந்த கையெழுத்து போலியானது என்பது தெரியவந்தது.

விசாரணைக்கு உத்தரவு

இதுதொடர்பாக கணக் காளர் சரஸ்வதியிடம் கேட்டபோது, ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கிக்கு அனுப்பியது தெரியவந்தது. இதேபோல் கடந்த ஆண்டு (2019) மார்ச் மாதம் ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 720 மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசன் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் கணக்காளர் சரஸ்வதியிடம் துறை ரீதியாக விசாரணை நடத்த நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் இதற்கு முன்பு தஞ்சை, அரியலூர், கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகளிலும் பணியாற்றி உள்ளார். அரியலூர் நகராட்சியில் பொறுப்பு ஆணையராகவும் பதவி வகித்துள்ளார். அங்கும் இதேபோன்று பணம் மோசடி செய்தாரா? என்பது குறித்து தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் உடந்தையா?

சரஸ்வதி தனி நபராக இந்த மோசடியில் ஈடுபட்டாரா? அல்லது வேறு அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா? மோசடி செய்த பணம் எவ்வளவு? என்பது பற்றி அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் தான் முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திருமலைவாசனிடம் கேட்டபோது, ‘வங்கியில் இருந்து காசோலை தொடர்பாக புகார் வந்ததும் உடனடியாக சம்பந்தப்பட்ட கணக்காளரை அழைத்து விசாரித்தபோது போலி கையெழுத்து மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்பதால் உயர் அதிகாரிக்கு இது குறித்து தகவல் அனுப்பி உள்ளேன். மேலும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்