வீட்டை அபகரித்து கொண்டு அடித்து விரட்டிய மகன்கள் மீது நடவடிக்கை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மூதாட்டி மனு

வீட்டை அபகரித்து கொண்டு அடித்து விரட்டிய மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) கதிரேசனிடம் மூதாட்டி மனு அளித்தார்.

Update: 2020-02-03 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சூலமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் தனபால்(வயது70). இவருடைய மனைவி தையலம்மாள்(65). இவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். ஆனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி(பொறுப்பு) கதிரேசனிடம் தையலம்மாள் மனு அளித்தார்.

அந்த மனுவில், என் பெயரிலும், எனது கணவர் பெயரிலும் இருந்த வீடு, வயல்களை 2 மகன்களும் அபகரித்து கொண்டு என்னையும், கணவரையும் அடித்துவிரட்டிவிட்டனர். போலீசாரிடம் புகார் அளித்ததை அறிந்து என் கணவரை அடித்து உதைத்து கை, கால்களை உடைத்துவிட்டனர். அவரை கொலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து தாக்கி இருக்கின்றனர். காயம் அடைந்தவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன்.

போலீசாரிடம் பேரம்

அங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் எனது கணவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றேன். அய்யம்பேட்டை போலீசார் வந்து விசாரணை செய்து புகாரை பெற்று சென்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனது மகன்கள், போலீசாரிடம் பேரம் பேசி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனை தையலம்மாள் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

மேலும் செய்திகள்