நடத்தையில் சந்தேகம்: தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூர கொலை கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-03 22:01 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகரை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் காளிமுத்துவுக்கு மனைவி ராஜம்மாள் மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அடிக்கடி வீட்டில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்றுமுன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்க சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லைப் போட்டு காளிமுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மம்சாபுரம் போலீசார் விரைந்து சென்று ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு அங்கு பதுங்கி இருந்த காளிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளிமுத்து இந்த மில்லில் சுமார் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வேலைக்கு சேர்ந்து இங்கு உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து பணிபுரிந்த வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததும், சமீபத்தில்தான் சேர்ந்து வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்