ஆசிரியர் வீட்டில் ரூ.6½ லட்சம் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பணகுடியில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து ரூ.6½ லட்சம் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-02-03 23:03 GMT
பணகுடி,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள இ.பி.காலனியை சேர்ந்தவர் துரை (வயது 50). அவருடைய மனைவி அன்னமேரி சுகந்தி (45). ஆசிரியர்களான இவர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் 2 பேரும் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 32 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6½ லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பணகுடி போலீசில் துரை புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

வலைவீச்சு

போலீஸ் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர் அகஸ்டா வந்து தடயங்களை பதிவு செய்தார். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது வழக்குப்பதிவு செய்தார்.

வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 3 தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பணகுடியில் பட்டப்பகலில் துணிகரமாக நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்