போலீஸ் சீருடையில் வசூல்; வாலிபர் கைது

கடலூரில் போலீஸ் சீருடையில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-04 23:00 GMT
கடலூர்,

கடலூர் ஜவான் பவான் இணைப்பு சாலை கம்மியம்பேட்டை சுடுகாடு அருகே நேற்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் போலீஸ் சீருடையில் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து, தான் போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பணம் வசூல் செய்ததாக தெரிகிறது.

இதுபற்றி பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

விசாரணை

அப்போது அங்கு போலீஸ் சீருடையில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரை பார்த்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், நீங்கள் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள்? என கேட்டனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் இளவரசன் (வயது 30) என்பதும், போலீஸ் சீருடை அணிந்து கொண்டு இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பரபரப்பு

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கைதான இளவரசன், வேறு எந்த பகுதியிலாவது போலீஸ் சீருடையில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வாலிபர் வசூல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்