குடிபோதையில் தகராறு செய்ததால் தலையில் கல்லை போட்டு தந்தை கொலை; டிரைவர் கைது

மதுரையில் குடிபோதையில் தகராறு செய்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-02-04 22:30 GMT
மதுரை,

மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லாணை (வயது 60), கொத்தனார். இவரது மகன் வினோத் (27). டிரைவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கல்லாணை தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனை அவரது மகன் வினோத் பல முறை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லாணை குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கினார்.

தலையில் கல்லை போட்டு கொலை

உடனே அவர் இது குறித்து தனது மகனுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். பின்னர் வீட்டிற்கு வந்த வினோத்திற்கும் அவரது தந்தைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து கல்லாணை தலையில் அவர் போட்டார். அதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வினோத் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் அவர் அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி மூலம் அண்ணாநகர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொலை செய்த வினோத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்