டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.

Update: 2020-02-10 00:15 GMT
நெல்லை,

இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. இதுவரை இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இனப்படுகொலை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இரு பிரதமர்களின் சந்திப்பு இலங்கை தமிழர் நலனுக்கு எதிரானது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் தனி தீர்மானம் கொடுத்து இருக்கிறார். இந்த தீர்மானம் பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் தனபால் கூறி இருக்கிறார். வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. காவல்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது. 10 லட்சம் வாக்கி-டாக்கிகள் வாங்க பட்ஜெட்டில் ரூ.47 கோடியே 56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாக தொகை செலுத்தி வாக்கி-டாக்கி வாங்கப்பட்டு உள்ளது. காவல்துறை அமைச்சர் என்ற முறையில் இந்த ஊழல் புகாருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். அப்படியில்லையென்றால் இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி. நிறுவனம் தற்போது சீர்குலைந்து விட்டது. லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அரசு பதவிகளை விற்பனை செய்து விட்டனர். இந்த வி‌‌ஷயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள். இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் செய்ய முடியாது. எனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அவர் வட்டிக்கு பணம் விட்டதாக சொன்னார். இந்த பிரச்சினை தற்போது கிளறப்பட்டது. உடனே அவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது. தற்போது நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்துள்ளது. பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஏதோ உள்நோக்கத்தோடு சோதனை நடப்பதாக தெரிகிறது. மத்திய அரசு வருமான வரித்துறையை தனது கையில் வைத்துக்கொண்டு வேண்டாதவர்கள் மீது ஏவி விடுகிறது.

ரஜினிகாந்த் படம் திரையிடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு வெளியே வருவார். அவர், ரசிகர்களிடம் உங்களை ஏமாற்ற மாட்டேன் என்பார். அவர் இதுவரை கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்கவில்லை. ரஜினிகாந்த் ஒருபோதும் கட்சி தொடங்க மாட்டார். இதுபற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்