தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தொடங்கி, நடந்து வருகின்றன.

Update: 2020-02-09 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜேசையா, செயலாளர் ஆல்ட்ரின், மெரின்டோ வி.ராயன், நிக்கோலஸ், ரமேஷ், வால்ட்டர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

24 அணிகள்

இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 24 கால்பந்து அணிகள் கலந்து கொண்டன. முதல் லீக் போட்டி ஸ்பிரிட்டடு யூத் கால்பந்து அணியும், சவுத்கோஸ்ட் சாசர் அணியும் விளையாடின. இதில் சவுத்கோஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து இந்த மாதம் இறுதி வரை நடக்கிறது. இந்த லீக் போட்டியில் முதல் இடம் பெறும் அணி மாநில அளவிலான லீக் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்