அரசுப்பள்ளி வளாகத்தில் இயங்கும் கல்வி அலுவலகங்களை மாற்றக்கோரி மனு

அரியலூர் அரசுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் கல்வி அலுவலகங்களை மாற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2020-02-10 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 378 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார். இதில் சமூக ஆர்வலர் சங்கர் அளித்த மனுவில், அரியலூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியானது கடந்த 1924-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளி வளாகத்தில் ஆண்கள் உயர் நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி என தனித்தனியே செயல் பட்டு வருகிறது இதில் சுமார் 1,800 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வித்திட்ட அலுவலகம், மாவட்ட கல்வி தேர்வு துறை அலுவலகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மாணவர்களுக்கு இடையூறு

இதனால் அடிக்கடி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூட்டங்கள் பள்ளி நாட்களில் நடத்தப்படும் போது, மைக்செட் அமைப்பதால், மாணவ-மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருபவர்கள் தங்களது வாகனங்களை பள்ளி பகுதியில் நிறுத்திச் செல்வதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்த அலுவலகங்களை உடனடியாக காலி செய்து மாணவர்களின் படிப்பிற்கு ஏற்ற சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் இருங்களாகுறிச்சி காலனித்தெருவை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 2 மற்றும் 3 குடும்பங்கள் ஒரே வீட்டில், வசதியின்மை காரணமாக வசித்து வருகிறார்கள். இதனால் இடநெருக்கடி உள்ளது. எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்