திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2020-02-10 23:45 GMT
தூத்துக்குடி, 

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அங்கு உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிக்கப்பட்ட திட்டங்கள் திறப்பு விழா நடைபெறுகிறது.

இதற்கான மேடை அமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து துறைகளின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சியும் அமைக்கப்படுகிறது. விழாவில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம் இதுவரை 1,318 பேர் பயன்பெற்று உள்ளனர். இந்த திட்டத்தில் இதுவரை எந்தவித புகார்களும் வரவில்லை. ரேஷன் கடைகளில் இருப்பு விவரம் முழுமையாக கண்காணித்து வருகிறோம். இருப்பு குறைபாடு ஏற்பட்டால், உடனடியாக பொருட்களை வழங்கி வருகிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் எதுவும் இல்லை. ஏற்கனவே 4 பேர் கண்காணிக்கப்பட்டனர். வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல் மாலுமிகளுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்படுகிறது. ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அதற்கான தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இந்த வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிச்சநல்லூர் அகழாராய்ச்சி தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அரசாணை வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவும், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் குழுவும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மணப்பாட்டை சேர்ந்த மீனவர் வெளிநாட்டில் இறந்ததாக தகவல் வந்தது. அதன்பேரில் அந்த நாட்டின் தூதரகத்தை தொடர்பு கொண்டு உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, ரதவீதிகளில் சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, சமூகபாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சங்கரநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்