மனைவியின் கள்ளக்காதலால் அவமானம்: கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது

மனைவியின் கள்ளக்காதலால் அவமானம் அடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதில் சம்பந்தப்பட்ட மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2020-02-11 00:00 GMT
தாராபுரம், 

தாராபுரம் உப்புத்துறைப்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). கார் டிரைவர். இவரது மனைவி சுதா. இவர் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் வேலுச்சாமி நேற்று முன்தினம் இரவு உப்புத்துறைப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன் பிறகு நேற்று காலை வெகுநேரமாகியும், வீட்டின் கதவு திறக்கவில்லை. அருகே இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, வேலுச்சாமியின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் வேலுச்சாமி சேலையில் தூக்குப்போட்டு தொங்கியபடி இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேலுச்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் வேலுச்சாமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலுச்சாமி தனது கைப்பட ஒரு கடிதம் எழுதிவைத்திருப்பது தெரிய வந்தது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்(40) என்பவர் தான் காரணம் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த கடித்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேலுச்சாமியின் மனைவி சுதாவுக்கும், கிராம நிர்வாக அதிகாரி சுரேசுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. சுரேஷ் ஏற்கனவே திருமணமானவர்.

இந்த நிலையில் வேலுச்சாமிக்கு தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தவுடன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சுதாவிற்கும். வேலுச்சாமிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுதா தனது கணவனை விட்டுப்பிரிந்து, பூங்கா அருகே சிபி கார்டனில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

சுதாவின் கள்ளத்தொடர்பு குறித்து வேலுச்சாமியிடம் சிலர் விசாரித்துள்ளனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் வேலுச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி சுரேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாலுகா அலுவலக உதவியாளரின் கள்ளக்காதல் விவகாரத்தில் அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்