திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-02-12 13:26 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில் 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான நேற்று தை உத்திர வருசாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்துக்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள், கோவில் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

வருசாபிஷேகம் 

காலை 9.10 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை, வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவில் மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்