கொள்ளிடம் பகுதியில், மணல் அள்ளிய 7 பேர் கைது - டிராக்டர், 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

கொள்ளிடம் பகுதியில் மணல் அள்ளிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிராக்டர் மற்றும் 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-02-12 22:15 GMT
கொள்ளிடம்,

கொள்ளிடம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், மேற்கண்ட இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கொள்ளிடம் அருகே முதலைமேடுதிட்டு பகுதியில் திருட்டுதனமாக மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார், மணலுடன் அந்த டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணல் அள்ளி வந்தது முதலைமேடு திட்டு கீழத்தெருவை சேர்ந்த ராதா மகன் மணிகண்ணன் என்பதும், அவருக்கு உடந்தையாக நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் விஜய் (வயது 20), ராமலிங்கம் மகன் தங்கத்துரை (20) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்ணன், விஜய், தங்கத்துரை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் திருட்டுதனமாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிவந்த கீரங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (58), சோதியக்குடியை சேர்ந்த சவுந்தரராஜன் (60), ஆனந்தக்கூத்தன் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (60), சிதம்பரநாதபுரத்தை சேர்ந்த பாலசந்திரன் (33) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து மணலுடன் 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்