தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 70 கிலோவுக்கு மேல் உள்ள உடைமைகளுக்கு இனி கட்டணம் வசூல் அதிகாரி தகவல்

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 70 கிலோவுக்கு மேல் கொண்டு செல்லப்படும் உடைமைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-02-12 22:45 GMT
மும்பை,

இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் மும்பை- ஆமதாபாத் இடையே கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரெயிலில் அதிக சுமை கொண்ட உடைமைகளை கொண்டு செல்லும் பயணிகளிடம் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கட்டணம் வசூல்

தேஜஸ் ரெயிலில் அமரும் இருக்கை கொண்ட பெட்டியில் பயணிக்கும் ஒரு பயணி சுமார் 40 கிலோ வரையிலும், எக்ஸ்கியூடிவ் பெட்டியில் பயணிக்கும் பயணிக்கு சுமார் 70 கிலோ வரையிலும் கட்டணம் இன்றி இலவசமாக உடைமைகள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கு அப்பாற்பட்டு கூடுதல் சுமை கொண்ட உடைமைகள் கொண்டு செல்ல வேண்டுமெனில் அதற்கான கட்டணம் செலுத்த நேரிடும். இதற்கான கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகள் எடை சரிபார்க்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதி டிக்கெட் வசூலிக்கப்படும். கூடுதல் சுமை கொண்ட உடைமைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் கோடை கால விடுமுறையை யொட்டி அமலுக்கு கொண்டுவரப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்