ராசிபுரம் அருகே அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டம்

ராசிபுரம் அருகே அரசு கல்லூரி ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-12 22:43 GMT
ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி அருகே ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இந்த விடுதி மாணவர்கள் சிலர் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி உணவு உண்ணாமல் விடுதியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆதிதிராவிடர் நல தாசில்தார் ராஜா அங்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விடுதிக்கு உடனடியாக குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்று உணவு சாப்பிட்டனர். மாணவர்களின் இந்த தர்ணா போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்