விறகு ஏற்றிவந்த 11 லாரிகள் பறிமுதல்

உரிய அனுமதி பெறாமல் விறகு ஏற்றிவந்த 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-02-13 22:00 GMT
ஈரோடு, 

உரிய ஆவணங்கள் இன்றி ஈரோடு வழியாக லாரிகளில் விறகுகள் ஏற்றிச்செல்லப்படுவதாக ஈரோடு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரோடு தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை பணியாளர்கள், ஈரோடு-சென்னிமலை ரோட்டில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக விறகு பாரம் ஏற்றி வந்த 11 லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த லாரிகளில் உரிய அனுமதி பெறாமல் விறகு பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை பணியாளர்கள் 11 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாசில்தார் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘உரிய அனுமதி இல்லாமல் விறகு பாரம் ஏற்றிவந்த 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ.வுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அபராதம் குறித்து ஆர்.டி.ஓ. தான் முடிவு செய்வார்’ என்றார்.

மேலும் செய்திகள்