வியாபாரியை கத்தியால் வெட்டி பணம்-செல்போன் பறிப்பு 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

புழல் அருகே வியாபாரியை கத்தியால் வெட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-02-13 22:30 GMT
செங்குன்றம்

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 29). இவர், மாதவரம் பால்பண்ணை அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பணம்-செல்போன் வழிப்பறி

புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகே வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியால் அவரது கை, தோள்பட்டை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியது.

பின்னர் சரத்குமாரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துச்சென்று விட்டனர். இதுபற்றி புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்