திருமணமாகாத விரக்தியில், டிரான்ஸ்பார்மரில் மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை
மயிலாடுதுறை அருகே திருமணமாகாத விரக்தியில் டிரான்ஸ்பார்மரில் மின்கம்பியை பிடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஆண்டாஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்ய பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை.
திருமணமாகாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் ஆண்டாஞ்சேரி மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ஏறி அதில் உள்ள மின்கம்பியை பிடித்துள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.