நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-13 23:15 GMT
நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சந்திரன் (வயது 35). தொழிலாளி. இவர் நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த லட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்புகொடி (12), இந்திரன் (9) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி, கொக்கிரகுளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்தார். நேற்று முன்தினம் சந்திரன், மனைவி, குழந்தைகளை அழைத்து செல்வதற்காக கொக்கிரகுளத்துக்கு வந்திருந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது.

பின்னர் இரவில் சந்திரன் வீட்டை விட்டு வெளியேறி சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவர் கொக்கிரகுளம் சிவன் கோவில் அருகில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் அதற்குள் லட்சுமி குடும்பத்தினர் சந்திரன் உடலை மீட்டு லட்சுமியின் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர்.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்ய தருமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சந்திரனின் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்