திருமங்கலம் அருகே 2,700 மதுபாட்டில்களுடன் வேன், கார் பறிமுதல்-6 பேர் கைது

திருமங்கலம் அருகே 2,700 மதுபாட்டில்களுடன் வேன், கார் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-02-13 22:00 GMT
திருமங்கலம், 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணி அருகே மதுரை-உசிலம்பட்டி ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி ஒரு மினி வேன் வந்தது.

போலீசார் அந்த வேனை மடக்கி சோதனை செய் தனர். வேனின் மேல் பகுதியில் மாட்டுத்தீவன மூடைகள் இருந்தன. போலீசார் சோதனை நடத்திய போது, மாட்டுத்தீவன மூடைகளின் அடியில் பெட்டிகளில் ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வேன் டிரைவரையும், அவர் கொடுத்த தகவலின் பேரில் அதனை பின் தொடர்ந்து வந்த காரில் இருந்தவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து, மதுரையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து தனிப்பிரிவு போலீசார், திருமங்கலம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உதவி சூப்பிரண்டு வனிதா, மதுவிலக்கு துணை சூப்பிரண்டு ஞானரவி ஆகியோர் விரைந்து வந்தனர்.

பிடிபட்ட வேன் டிரைவர் பொன்னு சிவா, கார் டிரைவர் ராகவன் மற்றும் காரில் இருந்த காரைக்காலை சேர்ந்த கார்த்திகேயன், தினேஷ்குமார், செல்வகுமார், சரவணன் என 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2,640 மதுபாட்டில்கள், மினி வேன் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்