கணவர் இறந்த துக்கம் தாங்காமல் வி‌‌ஷம் குடித்து மனைவி தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் வி‌‌ஷம் குடித்து மனைவி தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2020-02-17 22:30 GMT
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிவிலியாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது மனைவி செல்வராணி(வயது 29). இவர்களுக்கு காளிதாஸ்(12) என்ற மகனும், அபிநயா(8) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலியானார். தன்னையும், தனது குழந்தைகளையும் கணவர் தவிக்கவிட்டுவிட்டு சென்று விட்டாரே? என்று செல்வராணி மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வராணி வீட்டில் இருந்து வி‌‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வராணி நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

இதுகுறித்து செல்வராணியின் தந்தை மண்ணாங்கட்டி திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகளின் தாய் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்