ஓசூரில் பரபரப்பு 3 தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

ஓசூரில் 3 தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

Update: 2020-02-18 23:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் காவேரி மற்றும் குணம் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல பாகலூர் சாலையில் சந்திரசேகரா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த 3 மருத்துவமனைகளுக்கும் நேற்று காலை 20 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து தனியார் மருத்துவ மனைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரையில் இந்த சோதனை நீடித்தது.

பொதுவாக வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனைகள் நடக்கும் போது வருமான வரித்துறையினர் கதவுகளை பூட்டி ரகசியமாக சோதனை நடத்துவது வழக்கம்.

பரபரப்பு

ஆனால் ஓசூரில் 3 தனியார் மருத்துவமனைகளில் சோதனை நடத்திய காரணத்தால் நோயாளிகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எந்த மருத்துவமனையின் கதவுகளும் பூட்டப்படவில்லை. இதனால் நோயாளிகளும் வழக்கம் போல மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.

இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறையினரை தொடர்பு கொண்டபோது, சோதனை தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தனர்.

ஓசூரில் 3 தனியார் மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்