விருத்தாசலம் அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 8 ஆண்டு சிறை - கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

விருத்தாசலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2020-02-18 22:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள இருப்பு தெற்கிருப்பு காலனியை சேர்ந்தவர் தவிடன் மகன் பழனிவேல் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவார். அப்போது அந்த வீட்டில் உள்ள 16 வயது சிறுமியிடம் பேசி பழகி வந்தார்.

சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அருகே உள்ள செங்கல்சூளையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார்கள். இதனால் வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பழனிவேல் கடந்த 12.2.2018 அன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் நடந்த சம்பவத்தை சிறுமி அவளது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதையடுத்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பழனிவேலை கைது செய்து, அவர் மீது கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி பழனிவேலுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்தார். இதையடுத்து பழனிவேலை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் (பொறுப்பு) செல்வ பிரியா ஆஜரானார்.

மேலும் செய்திகள்