சிங்கப்பெருமாள் கோவில் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி, மகன் படுகாயம்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

Update: 2020-02-19 22:30 GMT
வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒழையூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 65). இவரது மகன் தரணிபாபு(35), இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தனது தாயை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

சிங்கப்பெருமாள்கோவில் அருகே செல்லும் போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மகேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகன் தரணிபாபு பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த தரணிபாபுவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தரணிபாபு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்