கோவில் விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே தகராறு சமரச பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு
கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே இருந்து வந்த தகராறு நீதிபதிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுமுக தீர்வு காணப்பட்டது.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில 150 ஆண்டு கால பழமையான கங்கைஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நயினார் குப்பம் நாயுடு தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும். ஓரியூர் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் பொதுவான கோவிலாக உள்ளது.
இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு இருதரப்பினருக்கும் கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டு நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து இரு தரப்பினரும் கடந்த 2017-ம் ஆண்டு மதுராந்தகம் சார்பு கோர்ட்டு் மற்றும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை வக்கீல்கள் செல்வம் மற்றும் ராஜன் காந்தி ஆகியோர் நடத்தி வந்த நிலையில் நேற்று வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு கோர்ட்டு நீதிபதியுமான சரிதா மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரியா ஆகியோர் முன்னிலையில் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் கோவில் திருவிழா பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து சுமுக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர்.