நூதன முறையில் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மோசடி

மணமேல்குடி அருகே பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் நூதன முறையில் மோசடி நடந்துள்ளது.

Update: 2020-02-19 22:30 GMT
மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் மனைவி யசோதா (வயது 32). இவர் மணமேல்குடியில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவருடைய செல்போனுக்கு நேற்று முன்தினம் காலை தொடர்பு கொண்ட ஒருவர், வங்கியிலிருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை கொடுங்கள். உங்களுக்கு புதிய கார்டு கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனை நம்பிய யசோதா தனது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்து உள்ளார்.

ரூ.50 ஆயிரம் மோசடி

இதைத்தொடர்ந்து, மாலை யசோதா வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்து 253 எடுக்கப்பட்டு இருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. இதையடுத்து அவர் உடனடியாக வங்கி மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் எதுவும் தொடர்புகொள்ளவில்லை என கூறியுள்ளார். பின்னர் தனது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் மோசடி நடந்துள்ளது அவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த யசோதா இதுகுறித்து மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்